வியாழன், 29 செப்டம்பர், 2011

பார்கோடு (BarCode)

­பார்கோடு – அடிப்படை செய்திகள்
வளர்ந்துவரும் தொழில்நுட்பத்தின் வெளிப்பாடுதான் பார்கோடுஎனப்படும் வசதியாகும். நுகர்வோர் பயன்படுத்தும் பொருட்களின் எண்ணிக்கையும், அளவும் அதிகரித்துவரும் இந்த நாட்களில், சந்தையில் அவற்றை கையாளும் ஆட்களின் எண்ணிக்கை பெருமளவில் குறைந்து வருகிறது. அதாவது விற்பனை நிலையங்களில் வேலைபார்க்க சரியான எண்ணிக்கையில் ஆட்கள் கிடைப்பது இல்லை. ஆனால் பரிமாற்றம் மட்டும் அதிகரித்து வருகிறது. எனவே குறைவான எண்ணிக்கையில் உள்ள மனித சக்தியை பயன்படுத்த வேண்டிய சூழ்நிலை நிலவுகிறது. இதனால் மனித சக்திக்குத் துணையாக கணினி தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது.
கணினி தொழில்நுட்பம்
ஒரு பொருளின் அளவு, விலை மற்றும் கையிருப்பு ஆகியவற்றை கணினியில் உட்செலுத்தி வைத்துக் கொண்டு தேவையானபோது மட்டும் அதனை பயன்படுத்திக் கொள்ள முடிகிறது. வடிவமைப்பில் - குறிப்பாக பேக்கேஜிங் துறைக்கான வடிவமைப்பில் - இந்த பார்கோடுகளை பற்றி அறிந்திருப்பதும் பயன்படுத்துவதும் அவசியமாகிறது. பார்கோடுகளை உருவாக்குவதற்கென தனியான மென்பொருளும், அவற்றை உருவாக்கிக் கொடுக்கும் சேவை நிறுவனங்களும் இருக்கின்றன. பொதுவாகத் தயாரிப்பாளர்கள் இவர்களிடமிருந்தே பார்கோடுகளை வாங்கி பயன்படுத்துகின்றனர். எனினும் கணினி வடிவமைப்பில் பெருமளவு பயன்படுத்தப்படும் கோரல்டிரா (CorelDraw) மென்பெருளிலும் இந்த பார்கோடை உருவாக்கும் வசதி கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் முதல் முறையாக உங்கள் கம்ப்யூட்டரில் கோரல்டிரா மென்பொருளை பதிவு செய்யும் பொழுது முழுமையாக, இந்த பார்கோட் பகுதியையும் சேர்த்து பதிவு செய்திருக்க வேண்டும். இல்லையென்றால் இந்தக் கட்டளை மங்கிய நிலையிலேயே காணப்படும்; செயல்படாது.
பார்கோடு உருவாக்கம்
இந்தக் கட்டளையை செலக்ட் செய்தவுடன் முதல் டயலாக் பாக்ஸ் வருகிறது
பாகம் 1 ஆகக் காட்டப்பட்டுள்ள பகுதியில் உள்ள ட்ராப் டவுன் லிஸ்ட்டில் பல முறைகள் கொடுக்கப்பட்டுள்ளன. இதில் தேவையான முறையை (Industry Standard Format) செலக்ட் செய்யுங்கள். (இந்தியாவில் பொதுவாக EAN-8, EAN-13 ஆகிய இரண்டு முறைகளே பெரும் அளவில் பயன்படுகின்றன. அதாவது எட்டு இலக்கங்கள் அல்லது 13 இலக்கங்களை உடைய குறியீட்டு எண்களை மட்டுமே இங்கு பயன்படுத்துகின்றோம். எனினும் இதில் கொடுத்துள்ள முறைகள் பற்றிய தெளிவான விவரங்களை அறிந்து பயன்படுத்த வேண்டும்.) இங்கு EAN-8 என்ற முறையை செலக்ட் செய்துள்ளோம். இந்த முறையில் கொடுக்க வேண்டிய எண்களை பாகம் 2ல் உள்ள டெக்ஸ்ட் பெட்டிகளில் கொடுக்கவும். தவறாகக் கொடுத்தால் எச்சரிக்கை வந்து நிற்கும்.
பாகம் 3ல் உள்ள சாம்பிள் ப்ரீவ்யூ பெட்டியில் நாம் செலக்ட் செய்துள்ள முறையின் மூலம் கிடைக்கவுள்ள பார்கோடின் வடிவம் காட்டப்படுகிறது. இதனை ஒப்புநோக்கி வேறு வடிவம் தேவையெனில் பாகம் 1ல் வேறு முறையை செலக்ட் செய்து கொள்ளவும். நெக்ஸ்ட் பட்டனை செலக்ட் செய்தால் அடுத்தடுத்து டயலாக் பாக்ஸ்கள் வருகின்றன.
இவற்றில் அச்சிடும் பொழுது இருக்க வேண்டிய தரம் மற்றும் பிற தன்மைகள் பற்றிய விவரங்கள் கேட்கப்படுகின்றன. பார்கோடுகள் பற்றிய முழு செய்திகளையும் அறிந்து கொண்டு, வேலையின் தன்மைக்கு ஏற்ப இதில் உள்ள வசதிகளை மாற்றிக் கொடுத்து கடைசியாக வருகின்ற டயலாக் பாக்ஸில் ஃபினிஸ் கொடுத்து முடித்தால், குறிப்பிட்ட முறையில் உங்களது தேவைக்கேற்ற பார்கோடு நிறுத்தப்படுகின்றது. இதனை அளவில் மாற்றம் செய்து பயன்படுத்தலாம். பார்கோடுகள் அவற்றை படித்து அறிகின்ற பார்கோடு ரீடர்களில் சிறப்பாக செயல்பட, தரம் முக்கியமாக தேவைப்படுகிறது. தரம் குறைவானால் தவறான தகவல்கள் தரப்பட்டு விடும். பார்கோடுகள் பொதுவாக இடமிருந்து வலமாகவே பார்கோடு ரீடர்களால் படிக்கப்படுகின்றன. எனவே பார்கோடுகள் உயரமாக இருக்க வேண்டியது இல்லை. அதற்காக நாமாக அகலத்தை பெரிதுபடுத்துவதும் கூடாது. முழுமையான விவரம் அறிந்து செயல்படவேண்டிய மிக முக்கியமான பகுதி.
பல்வேறு வகையான பார்கோடுகள்
சில வகையான பார்கோடுகளை கீழே காண்க.
EAN-8 (7 எண்களை நாம் கொடுக்க, 8வது எண் தானாகக் கொடுக்கப்படுகிறது.)

EAN-8 (கூடுதலாக 5 எண்கள் கொடுக்கலாம்.)

EAN-13 (12 எண்களை நாம் கொடுக்க, 13வது எண் தானாகக் கொடுக்கப்படுகிறது.)

EAN-13 (கூடுதலாக 5 எண்கள் கொடுக்கலாம்.)

ISBN 978 prefix (உலகளவிலான புத்தக எண் - 978 என்பது கொடுக்கப்பட்ட நிலையில்)

ISBN (உலகளவிலான புத்தக எண் மட்டும்)

இப்படி பலவகையான பார்கோடுகள் பயன்படுத்தப்படுகின்றன. இவை தவிர இந்திய அஞ்சல் துறையாலும் பார்கோடு பயன்படுத்தப்படுகிறது. அஞ்சல் குறியீட்டு எண்ணை விரைவாகக் கண்டுபிடித்து கடிதங்களை பிரித்தெடுக்க இது உதவுகிறது.
ஜெ. வீரநாதன்
பாலாஜி கணினி வரைகலைப் பயிலகம்


வியாழன், 7 ஏப்ரல், 2011

அடோபி போட்டோஷாப் சிஎஸ்4 - இரண்டு நாள் பயிற்சி வகுப்பு

கோவையில் முதல் முறையாக!

பாலாஜி கணினி வரைகலைப் பயிலகம் பெருமையுடன் வழங்கும்
அடோபி போட்டோஷாப் சிஎஸ்4
இரண்டு நாள் பயிற்சி வகுப்புகள்  (தமிழில்)

Balaji Institute of Computer Graphics Proudly Presents
Adobe Photoshop CS4
2 days Training (in Tamil)

நாள் / நேரம்  : 16-04-2011 சனி மற்றும் 17-04-2011 ஞாயிறு
                           இரு நாட்களும் காலை 10:00 முதல் 5:00 மணி வரை

நிகழிடம்* : பாலாஜி கணினி வரைகலைப் பயிலகம்
                    167, போலீஸ் கந்தசாமி வீதி, ஒலம்பஸ்,
                    இராமநாதபுரம், கோயம்புத்தூர் - 45

கட்டணம் : ரூ. 1500/- மட்டும் (நபர் ஒருவருக்கு) 
இந்தக் கட்டணம், பயிற்சிக் குறிப்பேடு, ரூ. 350 மதிப்புள்ள போட்டோஷாப் விளக்கப் புத்தகம், இரண்டு நாட்களும் காலை மதியம் தேநீர், மதிய உணவு, பயிற்சியில் கலந்து கொண்டமைக்கான சான்றிதழ், கணினி வரைகலையின் சங்கமம் மாத இதழின் ஒரு இதழ் ஆகியன உட்பட ஆகும்.

அச்சு, புகைப்படம் மற்றும் வலைதளப் பக்க வடிவமைப்பு போன்ற துறைகளில் பெரிய அளவில் பயன்பாட்டில் உள்ளது போட்டோஷாப் மென்பொருள். ஆனால் இதனை பயன்படுத்துகின்ற அளவோ மிகவும் குறைவாகவே உள்ளது. காரணம், இதன் சிறப்புத் தன்மைகள் பற்றிய முழுமையான விளக்கம் கிடைக்காததேயாகும். இதனை நீக்குவதற்காக நமது பயிலகம் மூலமாக முதல் முறையாக இந்த இரண்டு நாள் பயிற்சி வகுப்புகளை ஒருங்கிணைத்து நடத்துகின்றோம்.

எல்சிடி உதவியுடன் பெரிய திரையில், போட்டோஷாப் மென்பொருளின் அனைத்து கட்டளைகள், கருவிகள் பற்றிய விளக்கம் செயல்முறையாகக் காட்டப்படவுள்ளது.
கணினி வரைகலை வடிவமைப்பில் முன்னனுபவம் உள்ளவர்களும், இந்த போட்டோஷாப்வை தற்போது பயன்படுத்திக் கொண்டிருப்பவர்களும்  நேரடியாக இந்தப் பயிற்சி வகுப்புகளில் கலந்து கொண்டு போட்டோஷாபை பயன்படுத்தத் தொடங்கலாம்.
இதுபற்றி மேலும் தகவல் மற்றும் கலந்து கொள்ளுவதற்கான விண்ணப்பம் தேவைப்படுவோர் நேரிலோ, தொலைபேசி அல்லது மின்னஞ்சல் வழியாகவோ தொடர்பு கொள்ள வேண்டுகிறோம். பதிவு செய்து கொள்ள கடைசி நாள் 12-04-2011, செவ்வாய்கிழமை ஆகும். நிகழிடத்தில் பதிவு கிடையாது. எனவே முன்னதாக விண்ணப்பித்து உங்கள் பதிவை உறுதி செய்து கொள்ள வேண்டுகிறோம்.

திங்கள், 14 மார்ச், 2011

2 நாள் இன்டிசைன் பயிற்சி வகுப்புகள்

இன்டிசைன் - 2 நாள் பயிற்சி வகுப்புகள்!

பதிப்புத்துறைக்கான வேலைகளைச் செய்து முடிக்க உதவுகின்ற மென்பொருள் அடோபி இன்டிசைன் என்பதாகும். தற்போது புழக்கத்தில் உள்ள சிஎஸ்4 என்ற தொகுப்பில் இதன் 6வது பதிப்பு தரப்பட்டு உள்ளது. இதன் 7வது பதிப்பும் சிஎஸ்5 என்று தொகுப்பில் வெளியிடப்பட்டு விட்டது.
இந்த மென்பொருளை பயன்படுத்துவது தொடர்பான பயிற்சி வகுப்புகள் 2010, நவம்பர் மாதம் 27 சனி மற்றும் 28 ஞாயிறு ஆகிய இருதினங்கள் கோயம்புத்தூர் திவ்யோதயா மையத்தில் உள்ள மஹாத்மா காந்தி அரங்கில் நடைபெற்றது. துவக்கத்தில் இந்தப் பயிற்சி வகுப்புகளை, இராமநாதபுரத்தில் உள்ள நமது பயிலகத்தில் நடத்தவே முடிவு செய்திருந்தோம். ஆனால் நாங்கள் எதிர்பார்த்த அளவைவிட அதிக எண்ணிக்கையில் பயிற்சியாளர்கள் கலந்து கொள்ள விருப்பம் தெரிவித்திருந்ததால், நிகழிடத்தை மாற்றியமைத்தோம்.

கோவை நகரத்திலிருந்து மட்டுமல்லாது, ஆரணி, காஞ்சிபுரம் அருகேயுள்ள நரசிங்கப் பெருமாள் கோயில், உடுமலை ஆகிய ஊர்களிலிருந்தும் அச்சக நண்பர்கள் பெயர் பதிவு செய்திருந்தனர். குறிப்பாக நமது கணினி வரைகலையின் சங்கமம் இதழ் வழியாக தகவல் பெற்றவர்களும் இதில் கலந்து கொண்டனர். இரண்டு நாட்களும் காலை 10 மணிமுதல் மாலை 5 மணிவரையிலும் விளக்கங்கள் கொடுக்கப்பட்டன.

இரண்டாம் நாள் பங்கு பெற்றோரின் கருத்துக்கள் ஒரு விண்ணப்பம் வடிவில் பெறப்பட்டது. அதில் கேட்கப்பட்டிருந்த பங்குபெற்றோருக்குக் கிடைத்த விளக்கங்கள், நிகழிடம், சந்தேகங்கள் தீர்க்கப்பட்ட அளவு, பயிற்சிக் கட்டணம் உள்ளிட்ட 16 கேள்விகளுக்கு பெருவாரியாக நேர்மறையான பதிலே கொடுக்கப்பட்டிருந்தது.


இரண்டாம் நாள் மாலை கோயம்புத்தூர் மாஸ்டர் பிரிண்டர்ஸ் அசோசியேஷன் தலைவர் திரு. சி.டி.குமாரவேல் அவர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பங்குபெற்றோருக்கு சான்றிதழ்களை வழங்கி சிறப்புரையாற்றினார்.

தனது உரையில் அவர், "இந்திய அளவில் கணினி வரைகலை வடிவமைப் பாளர்களுக்குத் தேவை மிக அதிகமாக உள்ளது. பள்ளிகளிலேயே இதனை ஒரு பாடமாக்க வேண்டும் என்ற கோரிக்கையை, அகில இந்திய அச்சகதாரர் பேரவை மூலமாக நடுவண் அரசுக்குக் கோரிக்கையாக வைத்துள்ளோம். இதுபோன்ற பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்வதன்மூலம் நாமே தற்காலிகமாக நமது தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ள முடிகிறது" என்று குறிப்பிட்டார்.

மேலும் இந்த பயிற்சி வகுப்புகளின் தொடர்ச்சியாக, பங்குபெற்றோரின் வசதிக்கேற்ப, ஒரு சனிக்கிழமை நாளில் (நம்மிடம் முன்பதிவு செய்து கொண்டு) நமது பயிலகத்திற்கு நேரில் வந்து செயல்முறையாகத் தங்களது சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்ளும் வாய்ப்பும் வழங்கப்பட்டுள்ளது.

பயிற்சி வகுப்புகள் முழுமையாகவும், பங்குபெற்றோருக்கு பயனளிக்கும் வகையிலும், மனநிறைவடையும் அளவிற்கு நடத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இரண்டு நாளும் காலை மாலை தேநீர், மதிய உணவு ஆகியன நிகழிடத்திலேயே வழங்கப்பட்டது. மேலும் பயிற்சிக் குறிப்பேடு, இன்டிசைன் புத்தகம் ஆகியனவும் பங்கு பெற்றோருக்கு வழங்கப்பட்டன.

இதன் தொடர்ச்சியாக கணினி வரைகலை யில் பயன்படுத்தப்படும் கோரல்டிரா, போட்டோஷாப், இல்லஸ்ட்ரேட்டர் போன்ற மென்பொருட்களுக்கும் பயிற்சி வகுப்புகள், பயிலரங்குகள், கருத்தரங்குகள் போன்றவற்றை நடத்தவும் முடிவு செய்துள்ளோம்.

இவை உங்களுக்காக நடத்தப்படுகின்ற நிகழ்வுகள். அனைவரும் பங்குபெற்று பயனடைய அன்புடன் அழைக்கின்றோம்.

சனி, 11 டிசம்பர், 2010

இணையம் vs அச்சு

வண்ணங்கள், வடிவமைப்பைப் பொறுத்தவரை
இணையம் வேறு; அச்சு வேறு
கணினி, கணினி தொழில்நுட்பம், கணினி வரைகலை (கம்ப்யூட்டர் கிராபிக் டிசைனிங்), இணையம் (இன்டர்நெட்) - என்று எல்லாம் மிகவும் எளிமையாகிப் போன காலகட்டமான இன்றைய நாட்களில், இவற்றை பயன்படுத்து வோரின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துக் கொண்டே வருகிறது. குறிப்பாக, கல்லூரி மாணவர்கள், பேராசிரியர்கள், எழுத்தாளர்கள் மற்றும் மருத்துவர்கள் உள்ளிட்ட சிறப்பு வல்லுனர் கள் கணினி வரைகலை மற்றும் இணைய பயன்பாட்டை பெரிய அளவில் பயன்படுத்துவோர் பட்டியலில் முதலிடத்தில் உள்ளனர்.

தங்களது பாடத்தில் உள்ள திட்ட அறிக்கையை தயாரிப்பது, கல்வி நிலைய விழாக்களுக்குத் தேவையான பதாகைகளை (ஃபிளெக்ஸ் பேனர்கள்) உருவாக்குவது, விழா மலர்களை தயாரிப்பது போன்ற நேரங்களில் மாணவர்கள் கணினி வரைகலையை பயன்படுத்தத் தவறுவதில்லை. தாங்கள் எழுதியுள்ள புத்தகத்தை அச்சிற்குத் தயாரிக்க மற்றவர்கள் பெரிய அளவில் கணினி வரைகலையைப் பயன்படுத்துகின்றனர்.

பயன்படுத்தப்படுபவை

கணினியில் உருவாக்கப்படும் வரைகலை வேலைகளில் எழுத்துருக்கள் மற்றும் புகைப்படங்கள் ஆகியவையே பெரிய அளவில் பயன்படுத்தப்படுகின்றன. மாணவர்கள் உள்ளிட்ட மேலே நாம் குறிப்பிட்டவர்கள், இந்த வடிவமைப்பிற்குத் தேவையான பெரும்பாலானவற்றை இணையத்தின் வழியேதான் பெறுகின்றனர். குறிப்பாக புகைப்படங்களை (இமேஜஸ்) இவர்கள் இணையத்தின் வழியேதான் பதிவிறக்கம் செய்து பயன்படுத்துகின்றனர். இதில் தவறில்லை. ஆனால் தொழில்நுட்பத்தை புரிந்து கொள்ளாமல் இவர்கள் செயல்படுவதுடன், அதுவே சரியானது என்று வாதிடுவதுதான் வருத்தத்திற்குரியதாகும்.

இரண்டாவதாக இவர்கள் பயன்படுத்தும் எழுத்துருக்கள் (ஃபான்ட்ஸ்); குறிப்பாக தமிழ் எழுத்துருக்கள் இலவசமாகக் கிடைக்கின்றன என்பதற்காக இவற்றை எல்லா இடங்களிலும் பயன்படுத்த முடியாது என்பதை இவர்கள் அறியாமலிருக்கின்றார்கள்.

மூன்றாவதாக இவர்களது வடிவமைப்பில் செய்யப்படும் தவறு, இவர்கள் பயன்படுத்தும் தாளின் அளவு மற்றும் ஓர இடைவெளிகளாகும் (பேஜ் சைஸ் மற்றும் மார்ஜின்ஸ்).தொழில்நுட்பம்கணினி மற்றும் அச்சுத்துறையில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பங்கள் ஒன்றுக்கொன்று எதிரானவை. குறிப்பாக கணினி வரைகலையில் பயன்படுத்தப்படுவது மிகப் பெரிய பாதிப்பை தருகின்றவையாகும். கணினி வரைகலையைச் செய்து முடிக்க, கணினியில் பயன்படுத்தப்படும் கணினித் திரையில் காட்டப்படும் நிறங்கள் செயல்படுவது தொடு உணர்ச்சியால் அறியமுடியாத, ஒளியின் அடிப்படையிலாகும். ஆனால் அச்சுக்கலையில் பயன்படுத்தப்படும் நிறங்கள் பிக்மென்ட் என்ற திட அல்லது திரவப்பொருளின் அடிப்படையில் செயல்படுகின்றன.

நிறங்கள் மற்றும் அவற்றின் அமைப்பு

நிறங்கள் இயற்கையில் தோன்றுபவையே. வெவ்வேறு அலைவரிசை களில் இயற்கையாகத் தரப்படும் ஒளிக்கற்றைகளே நமது கண்களுக்கு வெவ்வேறு நிறங்களாக தெரிகின்றன. இந்த நிறங்கள் கணினித் திரையில் ஆர்ஜிபி என்ற அடிப்படைத் தொழில்நுட்பத்தில் செயல்படுகின்றன. அதாவது சிவப்பு, பச்சை மற்றும் நீலம் ஆகிய நிறங்களே அடிப்படையாக பயன்படுத்தப்படுகின்றன. இவற்றின் கலவையிலேயே மற்ற நிறங்களான, மஞ்சள் உள்ளிட்டவை பெறப்படுகின்றன. எடுத்துக்காட்டாக 100% சிவப்பு நிறத்தையும், 100% பச்சை நிறத்தையும் கலந்தால் 100% மஞ்சள் நிறம் கிடைக்கின்றது. இது ஆர்ஜிபி நிற அடிப்படையில் நடக்கின்றது.

உங்களிடம் சிவப்பு மற்றும் பச்சை மை இருந்தால் கலந்து பாருங்கள். மஞ்சள் கிடைக்குமா? நீங்களே சற்று சிந்தித்துப் பாருங்கள். 100% அடர்த்தியாக உள்ள இரண்டு நிறங்களைக் கலந்தால் 100% மென்மையான ஒரு நிறம் எப்படி கிடைக்கும். இது ஒரு பைத்தியக்காரத்தனமான முயற்சி அல்லவா? நிச்சயம் கிடைக்காது. ஆனால் கணினியில் உள்ள வரைகலை மென்பொருளில் தரப்பட்டுள்ள நிறப் பகுதியில் மேலே சொன்ன நிறங்களை கலந்து பாருங்கள். 100% மஞ்சள் நிறம் கிடைக்கிறது. இது எப்படி சாத்தியம்?கணினியில் கலக்கப்படுவது இரண்டு ஒளிக்கற்றைகள். சிவப்பு மற்றும் பச்சை என்பன இங்கு ஒளிக்கற்றைகளே. ஆனால் நாம் முயற்சிப்பது இரண்டு திரவப் பொருட்கள் அல்லது திடப்பொருட்கள். இவை சிவப்பு மற்றும் பச்சை நிறத்தில் உள்ளவை; இவற்றை கலந்தால், கருமையான அடர்நிறத்தில் ஒரு நிறம் கிடைக்கும்; அவ்வளவுதான். கணினி தொழில்நுட்பம் இங்கு பயனளிக்காது. அப்படியென்றால் அச்சுத்துறைக்கான நிற முறை என்ன? எதை பயன்படுத்த வேண்டும்.

இங்கு பயன்படுத்தப்படுவது சிஎம்ஒய்கே என்று குறிப்பிடப்படும் சயான், மெஜன்டா, யெல்லோ மற்றும் பிளாக் என்ற நான்கு பிராசஸ் கலர்களின் கூட்டு ஆகும். இந்த நான்கு நிறங்களையும் (அச்சு மையாக) தேவையான அளவில் கலந்தால் மட்டுமே குறிப்பிட்ட நிறம் கிடைக்கும். எடுத்துக்காட்டாக பச்சை நிறம் கிடைக்க சயான் மற்றும் யெல்லோ ஆகியவற்றை கலக்க வேண்டும். இதுபோல இந்த நான்கு நிறங்களையும் சரியான விகிதங்களில் கலந்தால் 14.6 மில்லியன் நிறங்கள் பெற முடிகிறது என்று இதுவரையிலும் கண்டுபிடித்துள்ளனர்.

எனவே இந்த அடிப்படையை மனதில் பதிய வைத்துக்கொள்ளுங்கள். ஆர்ஜிபி முறையில் தரப்படும் படங்களை சிஎம்ஒய்கே முறைக்கு மாற்றினால் மட்டுமே அச்சிட முடியும்.ஆனால் இவ்வாறு மாற்றும்போது, நிற இழப்பு (கலர் லாஸ்) ஏற்படுவது தவிர்க்க முடியாத ஒன்றாகும். இது இயற்கையானது. யாரும் தெரிந்தோ தெரியாமலோ செய்வது அல்ல. நீங்களே உங்கள் கணினியில் ஒரு புகைப்படத்தைத் துவக்கிப் பாருங்கள். பொதுவாக இணையம் வழியாகக் கிடைப்பவை ஆர்ஜிபி முறையிலேயே இருக்கும். உங்கள் வரைகலை மென்பொருளில் இதனை சிஎம்ஒய்கே முறைக்கு மாற்றுங்கள். கணினி திரையிலேயே நிற இழப்பு உங்கள் கண் முன்பாக தெரியவரும்.

ஆர்ஜிபியில் கிடைக்கும் அதே நிற அமைப்பை அச்சில் (சிஎம்ஒய்கே) பெற முடியாது. எனவே இதனை மனதில் வைத்துக் கொண்டு உங்கள் வடிவமைப்பில் இறுதியாக அனைத்தையும் சிஎம்ஒய்கே முறைக்கு மாற்றிக் கொள்ள வேண்டும். ஆர்ஜிபியில் நீங்கள் உருவாக்கி அச்சிற்குக் கொடுத்தாலும், அச்சிடும்போது அங்கு மாற்றித்தான் ஆகவேண்டும். அதனால் நிற இழப்பு ஏற்படத்தான் செய்யும். எனக்கு ஒரிஜினல் நிறம் அப்படியே வேண்டும் என்று அடம்பிடிப்பது கூடாது. அது முடியாது.

எழுத்துருக்கள்

இணையம் வழியே ஏராளமான எழுத்துருக்கள் இன்று கிடைக்கின்றன. எல்லா மொழிகளுக்கான எழுத்துருக்களும் கிடைக்கின்றன. ஆங்கில மொழியைப் பொருத்தமட்டில் எண்ணிலடங்காத அளவிற்கு கிடைக்கின்றன.

தற்போது தமிழ் எழுத்துருக்களை இயக்குவதற்கான எளிமையான செயல் நிரலிகளும் (புரோகிராம்கள்) கூட இணையத்தில் இலவசமாகவே கிடைக்கின்றன. இணையத்தில் கிடைக்கும் எழுத்துருக்கள் எதற்கு பயன்படுத்தப்படுவதற்காக உருவாக்கப்பட்டவை? அவற்றின் செயல் திறன் என்ன? அவை எல்லா மென்பொருட்களிலும் இயங்கும் தன்மையுடன் உள்ளனவா? தற்போது இதனை பழகிவிட்டால் எப்போதும் இதனை தொடர்ந்து பயன்படுத்த முடியுமா? - இப்படி ஏராளமான கேள்விகள் கேட்டு அவற்றிற்கு சரியான, முறையான பதில் கிடைத்த பிறகுதான் அந்த எழுத்துருவை பயன்படுத்தத் துவங்க வேண்டும்.

ஆனால் நடப்பது என்ன? இன்று ஒரு எழுத்துரு முறை; நாளை ஒன்று - என்று மாற்றிக் கொண்டே இருக்கின்றனர். இந்த எழுத்துருக்களை மின்னஞ்சல், பிளாக் போன்ற இணையத்திற்கான செயல்பாடுகளுக்கு மட்டுமே பயன்படுத்துவது நல்லது. ஆனால் இவற்றை பயன்படுத்தி புத்தக வேலைகளை உருவாக்குவதும், வரைகலையில் பயன்படுத்துவதும் நடைபெறுகிறது. இதன் விளைவு, தரமற்ற வடிவம், வரைகலை, எழுத்து அமைப்பு ஆகியவையே கிடைக்கின்றன. இணையத்தின் வழியே கிடைக்கும் தமிழ் எழுத்துருக்களின் தரம் என்னவாக உள்ளது? ஒற்றெழுத்துக்களின் புள்ளி, இகர எழுத்துக்களின் கொம்பு ஆகியவை சரியான இடத்தில் நிறுத்தப்படுவது இல்லை. சற்றே விலகியே நிறுத்தப்படுகின்றன. எழுத்துக்களின் (அகலவசத்தில்) தடிமன் சரியான விகிதத்தில் இருப்பது இல்லை. ஒரே வகை எழுத்துருவில், தடிமனான (போல்டு), சாய்வான (இட்டாலிக்) எழுத்து வடிவங்கள் கிடைப்பதில்லை. இதனால் வடிவமைப்பில் எழுத்து வேறுபாட்டைக் காண்பிக்க வேறு எழுத்துருவை மட்டுமே பயன்படுத்த வேண்டியுள்ளது.

இணையத்தில் கிடைக்கும் எழுத்துருக்கள் பெரும்பாலும் அதிகபட்சமாக எம்எஸ் வேர்டு அப்ளிகேஷனில் மட்டுமே செயல்படுகின்றன. பேஜ்மேக்கர், கோரல்டிரா உள்ளிட்ட கணினி வரைகலை மென்பொருட்களில் செயல்படுவது இல்லை. அப்படியே ஒரு சில எழுத்துருக்கள் செயல்பட்டாலும், அவற்றின் அமைப்பு, வடிவம் ஆகியன சரியான முறையில் கிடைப்பது இல்லை. ஒற்றெழுத்துப்புள்ளிகளும், இகர எழுத்துக்களின் கொக்கிகளும் நகர்ந்து காணப்படுகின்றன. வரைகலைக்கான வடிவங்களாக இவை காணப்படுவது இல்லை. இவற்றையெல்லாம் சரிசெய்யும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

இணையத்தில் கொடுக்கப்படுபவை இணையப் பயன்பாட்டிற்கானவையே; அவற்றை அச்சிற்கு பயன்படுத்தினால் சரியான விளைவு கிடைக்காது. நூலாசிரியர்கள் தட்டச்சு செய்வதற்கு இவற்றை பயன்படுத்தலாம். இதனை புத்தகமாக மாற்றும்போது, அச்சகதாரர் அல்லது கணினி வரைகலைப் பகுதியில் உள்ளவர்கள் விருப்பத்திற்கு விட்டுவிடுவது நல்லது. அச்சிற்குக் கொண்டு செல்லப் போகின்றீர்கள் என்றால், அதற்கான சரியான, தரமான எழுத்துருக்களை பயன்படுத்துவது முறையாகும்.

தாள் அளவு

மூன்றாவதாக வடிவமைப்பில் செய்யப்படும் பெரிய தவறு, பக்க அளவு தேர்வு செய்வதாகும். கணினியில் பக்க வடிவமைப்பிற்காக வேர்டு, பேஜ்மேக்கர், கோரல்டிரா போன்ற மென்பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன. கல்வியாளர்கள் பெருமளவு பயன்படுத்துவது எம்எஸ் வேர்டு ஆகும். இதனைத் துவக்கினால் தயார்நிலையாக ஒரு பக்கம் தரப்படுகிறது. பொதுவாக இது லெட்டர் என்ற அளவில் உள்ளது. அதாவது இந்த லெட்டர் என்ற தாளின் நீளம் மற்றும் அகலமானது 215.9 279.4 ஆகும். அச்சுத்துறையில் பயன்படுத்தப்படும் இதற்கு இணையான அளவுள்ள தாளின் நீளம் மற்றும் அகலம் ஏறக்குறைய இதற்கு இணையாகவே உள்ளது. அதாவது டெமி 1/4 என்ற அளவுள்ள தாளின் நீளம் மற்றும் அகலம் 215 285 ஆகும்.
இந்தத் தாளில் அச்சுப்பரப்பு என்பது, 180 220 ஆகும். இதுபோக மீதி உள்ளவை தாளின் ஓர இடைவெளியாகக் (மார்ஜினாகக்) கொடுக்கப்படுகின்றன. அதாவது உச்சியில் - 38.5, அடியில்- 38.5, இடது - 15 மற்றும் வலது - 15 மிமீ இடைவெளியாகக் கொடுக்கப்படுகின்றன.

இதனால் தாளின் மையப்பகுதியே அச்சிற்கு பயன்படுத்தப்படுவதாக அமைகிறது. ஆனால் வேர்டு மூலம் புத்தகப்பக்கங்களை உருவாக்கு பவர்கள் இதனையும் மாற்றுவதில்லை.

தயார் நிலையில் தரப்படும் அளவுகளையே பயன்படுத்துகின்றனர். சரியாகச் சொல்லுவதென்றால் இதனை மாற்ற வேண்டும் என்பது அவர்களுக்குத் தெரிவதில்லை. தயார் நிலையில் கணினியைப் பொறுத்து இந்த அளவு மாறுபடுகிறது. அருகில் படத்தில் நமது கணினியில் தரப்பட்டுள்ள அளவுகளை கவனியுங்கள். இத்துடன் அல்லாமல், அச்சிற்கு என்று வரும்பொழுது நாம் மேலே சொன்ன அளவுகளும் கொடுக்கக் கூடாது. குறிப்பாக பாலிமாஸ்டர் பயன்படுத்தி அச்சிடும்போது, தாளின் மேல்பகுதியில் குறைந்தபட்சம் 35 முதல் 55 மிமீ இடைவெளி தரப்பட்டிருக்க வேண்டும். இது இல்லையென்றால் அச்சிட முடியாது. ஆனால் இந்த அளவைக் கொடுத்து லெட்டர் அளவு தாளில் வடிவமைப்பு செய்ய முடியாது. எனவே, தாளின் அளவு லீகல் என்பதாகத் தரப்பட வேண்டும். இந்த லீகல் என்ற தாளின் நீளம் மற்றும் அகலமானது 215.9 355.6 ஆகும். இதில் தான் அச்சுப்பரப்பு மற்றும் ஓர இடைவெளிகள் சரியானதாகக் கொடுக்க முடியும்.

எனினும் வடிவமைப்பு செய்து முடித்துவிட்டு, லேசர் பிரிண்டரில் அச்சு எடுத்துப்பார்க்க இந்த அளவு உதவாது. அதற்கு லெட்டர் அல்லது ஏ4 அளவுதான் பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டும். எனவே, லெட்டர் அல்லது ஏ4ல் வடிவமைப்பை முடித்து ஆசிரியர்கள் புத்தகவேலையை அச்சு எடுத்து படித்து சரி செய்து கொடுத்தாலும், அச்சிடுவதற்காக அந்த வடிவமைப்பை லீகல் அளவு தாளுக்கு மாற்றியே ஆகவேண்டும். இவ்வாறு மாற்றும்போது கொடுக்கப்பட்டுள்ள வடிவமைப்பில் மாற்றம் ஏற்படுவது தவிர்க்க முடியாததாகும். அத்துடன் இதற்காக ஒரு தொகை கட்டணமாகவும் கொடுக்கப்பட நேரிடும்.

ஆசிரியர்கள் உருவாக்கும் அத்தனையையும் அப்படியே அச்சிற்குக் கொண்டு செல்ல முடியாது என்பதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள். மேலும், நீங்கள் உருவாக்கியது என்பதால் உங்கள் வடிவமைப்பு முக்கியமா அல்லது அச்சிட்டபிறகு புத்தகம் படிக்கக் கூடியவிதத்தில் இருக்க வேண்டும் என்பது முக்கியமா என்பதை முடிவு செய்து கொள்ளவேண்டும்.

முன்பு தாள்களில் கைகளால் எழுதிக் கொடுத்தவை, அல்லது தட்டச்சு இயந்திரங்களின் உதவியால் தயாரித்துக் கொடுத்தவை - என்பவையே இன்று கணினியில் உருவாக்கிக் கொடுக்கப்படுகின்றன. ஒருவருக்கு உதவிய கணினி அப்படியே மற்றொரு பகுதியிலும் உதவாது என்பதையும் மனதில் கொள்ளவும். நாம் தான் கணினியில் உட்செலுத்திவிட்டோமே, இனி நேரடியாக அச்சிற்குக் கொண்டு செல்வதுதானே என்பது கிடையாது; முடியாது.

படங்களின் தரம் மற்றும் தொடர்பு

வடிவமைப்பாளர் மற்றும் அச்சகதாரர் சந்திக்கும் அடுத்த தொல்லை படங்களுக்கான தொடர்பு. மீண்டும் படங்களைப் பற்றியே சொல்ல வேண்டியுள்ளது. ஆனால் இந்த முறை நிற அமைப்பு அல்லாமல், அவற்றிற்கான தரம் மற்றும் கணினித் தொடர்பு பற்றிச் சொல்ல வேண்டியுள்ளது.

இணையத்திலிருந்து கிடைக்கும் படங்கள் தரம் குறைவாகவே இருக்கும். அது என்ன தரம்? பொதுவாகவே, படங்களை, குறிப்பாக புகைப்படங்களை அவை உருவாக்கப்பட்ட அளவில் அல்லது சிறிது அளவில் குறைத்து பயன்படுத்தலாம். எந்த நிலையிலும் அளவை பெரிதுபடுத்தக் கூடாது. பெரிதுபடுத்தினால் தரம் நிச்சயம் குறையும். அத்துடன் இந்தப் படங்களின் தரத்தை அளவில் குறிப்பிட என்ற அலகை பயன்படுத்துகின்றனர். ஒரு அங்குலத்தில் கொடுக்கப் பட்டிருக்கும் புள்ளிகளின் எண்ணிக்கையில் (டாட்ஸ் பெர் இன்ச்) படத்தின் தரம் முடிவு செய்யப்படுகிறது.

இணையத்தில் கொடுக்கப்படுபவை பெரும்பாலும் 72 டிபீஐ மட்டுமே இருக்கும். ஆனால் அச்சிற்கு 300 டிபீஐ இருந்தால்தான் நல்ல தரமான படம் என்று கொள்ளுவார்கள். இதற்குக் குறைவான அளவு உள்ள படங்கள் நிச்சயம் தரம் குறைவாகவே அச்சில் கிடைக்கும். குறிப்பாக பலவண்ண வேலைகளில் பயன்படுத்தப்படும் வண்ணப்படங்கள் மோசமாகவே காட்சி தரும். இதனை தவிர்க்க இயலாது. அருகே படத்தில் இரண்டு தரங்களையும் காண்க. 72 டிபீஐயில் படம் தெளிவற்று காணப்படுவதை கவனிக்க. 300 மற்றும் 72 டிபீஐ படங்களையும் ஒரே அளவிற்கு (நீளம் மற்றும் அகலத்தில்) மாற்றியுள்ள நிலையில் இப்படித்தான் காண்பிக்கப்படும். 72டிபீஐ அளவுள்ள இதே படத்தை சிறியதாக்கினால் சற்றே தெளிவாக இருப்பதையும் படத்தில் காண்க. லார்ஜ் ஃபார்மேட் குறிப்பிட்டு தேடி எடுக்கப்படும் படங்கள் அச்சிற்கு ஏற்றவையாக இருக்கின்றன.
 
எனவே மீண்டும் நினைவில் கொள்ள வேண்டுகிறோம்; குறைவான டிபீஐ கொண்ட படத்தை அதிக டிபீஐக்கு மாற்ற முடியாது.

அடுத்ததாக கவனிக்கப்பட வேண்டியது படங்களுக்கான தொடர்பு (லிங்க் - ) ஆகும். குறிப்பாக வேர்டு அப்ளிகேஷனில் படங்களை நேரடியாக இன்சர்ட் கட்டளைமூலம் நிறுத்திவிடுகின்றனர். ஆனால் அச்சிற்குக் கொடுக்கும்போது இணையத்திலிருந்து அல்லது வேறு எந்தவகையிலாவது பெற்ற அந்தப் படங்களை தனியே இணைத்துக் கொடுப்பது இல்லை. வெறும் வேர்டு ஃபைலை மட்டும் அச்சிற்கு அனுப்புகின்றனர். இந்த வேர்டு ஃபைலை அப்படியே பயன்படுத்தினாலும், அல்லது வேறு பக்க வடிவமைப்பு அப்ளிகேஷனுக்கு மாற்றினாலும், அந்த படங்களின் தொடர்பு கொடுக்கப்பட வேண்டும். இல்லையென்றால் படத்தின் தரத்தில் மேலும் இழப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது.

வேர்டு பக்கங்களில் நிறுத்தப்பட்டுள்ள படத்தை செலக்ட் செய்து, காப்பி பேஸ்ட் கட்டளை மூலம் பயன்படுத்தச் சொல்லுவது சரியான வழி அல்ல. அதனால் தொடர்பும் கிடைப்பது இல்லை; தரத்திலும் மேலும் சிறிது இழப்பு ஏற்படும்.

எனவே பயன்படுத்தியுள்ள படங்களை தனி ஃபைலாக, தனியான ஒரு ஃபோல்டரில் நிறுத்திக் கொடுத்தால், அச்சிற்காக வடிவமைப்பு செய்யும்போது பயன்படுத்த முடியும்.

கவனத்தில் கொள்ள வேண்டியவை

இன்றைய அறிவியலால் பல செயல்பாடுகள் திறந்துவைத்துள்ள இரகசியங்களாகப் போய்விட்டன. இது தவிர்க்க இயலாததும் கூட. ஆனால் இந்த இரகசியங்களை முழுமையாக புரிந்து கொண்டு செயல்பட்டால் அனைவருக்கும் பயன்கிட்டும்.
நன்றி : தமிழ் கம்ப்யூட்டர், டிசம்பர் 1-15, 2009

அறிமுகம்

கணினி வரைகலைத் தொடர்பான கட்டுரைகள், பயிற்சிகள், அறிப்புகள், செய்திகள் ஆகியவற்றை பக்கங்களாக இங்கு வெளியிடலாம்.